Header ad

Breaking News

எனக்கு பயம் இல்லை.. நாங்கள் போராடுவோம்.. போலீசை பார்த்து விரல்களை உயர்த்திய மாணவி அதிரடி பேட்டி!

எனக்கு பயம் இல்லை.. நாங்கள் போராடுவோம்.. போலீசை பார்த்து விரல்களை உயர்த்திய மாணவி அதிரடி பேட்டி!


டெல்லி: எங்களுக்கு இந்த அரசு மீது பயம் கிடையாது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை மாணவிகள் இருவர் துணிந்து எதிர்க்கும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இந்த மாணவிகள் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நேற்று 100க்கும் அதிகமான ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று போலீசார் மாணவர்களை இப்படி அத்துமீறி தாக்கிய போது, அங்கு சில மாணவிகள் போலீசாரை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

மாணவிகள் சிலர் தங்களுடைய நண்பனை காப்பதற்காக போலீசிடம் சண்டை போட்டு அவர்களிடம் அடி வாங்கினார்கள். அதில் ஒரு மாணவி கொஞ்சம் கூட கலங்காமல் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தினார். இதனால் போலீசார் அந்த பெண்ணில் காலில் தாக்கினார்கள். அதோடு இப்படி எல்லாம் அடிக்க கூடாது.. அவ்வளவுதான், என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த பெண் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தும் வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.

தற்போது இவர்கள் இருவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் போலீசை நோக்கி விரல்களை நீட்டிய மாணவி பெயர் ஆயிஷா ரென்னா, இவர்கள் உடன் இருந்த இன்னொரு மாணவியின் பெயர் லதீடா பர்ஸானா, இன்னொரு மாணவி ஷகீன் அப்துல்லா. இந்த மூன்று மாணவிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இதில் ஆயிஷா ரென்னா வரலாறு மாணவி, லதீடா பர்ஸானா பிஏ அரபிக் மாணவி. இவர்கள் இருவரும் போலீசார் நேற்று முதல் நாள் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கி இருக்கிறார்கள். அதில், அங்கு மாலை 5.30 மணிக்குதான் போலீஸ் எங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது . அப்போது நாங்கள் 9 மாணவிகளும் ஒரு மாணவரும் கல்லூரி வளாகத்திற்குள் இருந்தோம் .

எங்களை சுற்றி வளைத்த போலீஸ், வெளியே வரும்படி கத்தியது. சில போலீசார் எங்களிடம் மோசமான வார்த்தைகளில் திட்டினார்கள். லத்தியால் எங்களை தாக்கி, எங்களுடன் இருந்த மாணவரை அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் அதை அனுமதிக்கவில்லை.

ஆனால் எங்களையும் மீறி போலீசார் அந்த மாணவரை வெளியே அழைத்து சென்று கடுமையாக தாக்கினார்கள். இதனால் அவர்களை தடுக்க வேண்டும் என்று வேகமாக ஓடி சென்று நாங்கள் மறைத்து நின்று கொண்டோம். போலீஸ் எங்களை தாக்காது, பெண்களை அடிக்காது என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களையும் தாக்கினார்கள்.

அப்போதுதான் எங்களுக்கு அவர்களின் குரூரம் தெரிந்தது. எங்களை தாக்கியவர்களில் சிலர் போலீஸ் கிடையாது என்றும் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு இந்த அரசு மீது பயம் இல்லை. இவர்களை பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களுக்கு அல்லா மீது மட்டும்தான் பயம்.

காஷ்மீரில் இதேபோலத்தான் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. நாங்கள் அமைதியாக இருந்தோம். அயோத்தி வழக்கிலும் இப்படித்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். நாங்கள் அரசு மீதும் , நீதிமன்றம் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டோம். அவர்கள் இப்போது எங்களை குறி வைத்துள்ளனர், அடுத்து மொத்த இந்தியாவையும் அவர்கள் குறி வைப்பார்கள் என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

No comments